செம்மறியாடு  பராமரிப்பு முறைகள் 
           
          சரியான பராமரிப்புடன் சினை ஆடுகளை  வளர்த்தால், ஈனும் குட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு அவற்றை நல்ல ஆரோக்கியத்துடன்  வளர்க்க முடியும். அதற்கு கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். 
          
            
              - குட்டி       ஈனும் தருணத்தில் உள்ள சினை ஆடுகளை தனிக் கொட்டிலில் வைத்துக் கவனத்துடன் வளர்க்கவேண்டும்.
 
              - சினை       ஆடுகளை ஊசி போடுதல், மருந்தளித்தல் என அடிக்கடி தொந்தரவு கொடுத்தல் கூடாது.       முடிந்தவரை தடுப்பூசி மருந்துகளை ஓரிரு தடவைகளில் போட்டு முடித்து விடுதல் நலம்.
 
              - குட்டி       ஈனுவதற்கு 3-4 வாரங்கள் முன்பு அதிக அளவில் அடர்தீவனமும் அளிக்கவேண்டும். அவ்வாறு       அளித்தால் குட்டி ஈன்றவுடன் பால் சுரப்பு அதிகமாக இருக்கும்.
 
              - சரியான       தீவனம் அளிக்கப்படவில்லையெனில் கரு கலைதல், குட்டி இறந்து பிறத்தல், இரத்தத்தில்       விஷத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
 
              - ஈன்ற       குட்டிகளை 4-6 நாளில் தாயிடமிருந்து பிரித்துக் குட்டிகளின் கொட்டிலில் வளர்க்கவேண்டும்.       முடிந்தவரை குட்டிகளுக்கு மென்மையான தரை அமைப்பு கொண்ட தனித்தனி கொட்டில் அமைத்தல்       நலம்.
 
              - குட்டி       ஈன்ற ஆடுகளின் பால் தரும் காலத்தைக் கவனித்துக் குறித்து வைத்தல் நலம். பொதுவாக       142-150 நாட்கள் வரை இருக்கும். இதைவிடக் குறைவாக இருந்தால் பால் தரும் நாட்களின்       எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
 
              - குட்டிகளை       குளிர், பனி, மழை வெய்யிலிருந்து முறையாகப் பாதுகாக்கவேண்டும்.
 
             
           
          குட்டி  ஈனும் போது கவனிக்க வேண்டியவை 
          
            
              - குட்டி       ஈனும் தருணத்தில் ஆடானது மந்தையிலிருந்து பிரிந்து விடும்.
 
              - ஆடு       அமைதியற்று, மடி பெருத்து, பெண் இனப்பெருக்க உறுப்புகள் சிவந்த வண்ணம் காணப்படும்.
 
              - பொதுவாக       ஆரோக்கியமான ஆடுகளில் குட்டி ஈனுதல் தானாகவே நடக்கும் எனினும் கீழ்க்காணும் நடவடிக்கைகளை       எடுப்பது நன்மையாகும்.
 
             
           
          குட்டிகளைப்  பிரித்துப் பாதுகாத்தல் 
          
            
              - 90       நாட்களில் குட்டியைத் தாயிடமிருந்து பிரித்துவிட வேண்டும். பால் உற்பத்தி தாய்       ஆட்டிடம் குறைவாக இருக்கும்பட்சத்தில் 60 நாட்களிலிலேயே பிரித்து விடுதல் நலம்.
 
              - தாய்ப்பாலுக்குப்       பதில் வேறு கலப்புத் தீவனங்கள் அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பால் அளித்தல் அவசியம்.
 
              - முள்,       குழி, அதிகக் கற்கள் கொண்ட பகுதிகளில் குட்டிகளை மேய விடுதல் கூடாது. ஏனெனில்       அவற்றுக்குக் கண் எரிச்சல், ஒவ்வாமை மற்றும் ரோமம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.
 
             
           
          (ஆதாரம்: www.vuatkerala.org) 
          செம்மறியாடு  பராமரிப்பு அட்டவணை 
             
            பண்ணையில் செம்மறி ஆடுகள் பராமரிப்பிற்கும்,  உரோமம் உரித்தலுக்கும் மித வெப்பப் பகுதிகளில் பின்பற்றப்படும் மாத அட்டவணை இங்கே  கொடுக்கப்பட்டுள்ளது. 
          ஜனவரி 
             
            பதிவேடுகள் சரிபார்த்தல், காதில்  அடையாளக்குறியிடுதல். குளிர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கொட்டகையை அமைத்தல், குட்டி ஈனும்  தருணத்தில் உள்ள சினைச் செம்மறியாடுகளைப் பாதுகாத்தல், நன்கு தீவனம் அளித்தல், குட்டி  ஈனுவதற்குக் கொட்டகையை தயார் செய்தல், வால் பகுதி நீக்கம், ஈன்ற குட்டிகளுக்கு முதல்  உணவு ஊட்டம், வசந்தகால கலப்பிற்குப் பொலி கிடாக்களைத் தயார் செய்தல் மற்றும் சினை  ஆடுகளை கிளாஸ்டிரிடியம் கிருமிகள் தாக்காமல் இருக்க அவற்றுக்குக் கிளாஸ்டிரிடியம் தடுப்பூசி  அளித்தல். 
          பிப்ரவரி 
             
            குட்டி ஈனுதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்  இத்தருணத்தில் தாய் ஆடுகளையும், குட்டிகளையும் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுத்தல்,  குட்டி ஈன்ற இளம் தாய்களுக்கு நிறையான தீனியளித்தல், தாயிடமிருந்து பிரிக்கப்படாத குட்டிகளை  கவனித்துத் தீனியளித்தல், அடையாளக்குறி இடுதல், வாலை நறுக்கி விடுதல், குட்டிகளின்  வளர்ச்சிப் பதிவேட்டில் செய்து முடித்த பராமரிப்பு முறைகளைப் பட்டியலிடுதல் இம்மாத  இறுதியில் இனக்கலப்பு செய்ய வேண்டிய, சூட்டில் உள்ள ஆடுகளைக் கண்டறிந்து இனச்சேர்க்கை  அல்லது செயற்கைக் கருத்தரிப்புக்குத் தயார் செய்தல், ஆட்டு அம்மைக்குத் தடுப்பூசி அளித்தல். 
          மார்ச் 
             
            மேற்கண்ட குட்டி ஈனுதல், தீனியளித்தல்  பராமரித்தல் அடையாளக் குறியிடுதல் போன்ற செயல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும். மேலும்  செம்மறியாடுகளை அவ்வப்போது கழுவிச் சுத்தம் செய்தல், உரோம வளர்ச்சியை கவனித்தல்,  உரோமம் உற்பத்தியாகும் ஆடுகளைக் கவனித்தல், ரோமங்கள் கத்தரித்தல், இரசாயனத்தில் அமிழ்த்துதல்  மற்றும் தடுப்பூசி அளித்தல். 
          ஏப்ரல் 
             
            ரோம வளர்ச்சி கண்டு கத்தரித்தல்,  இரசாயனக் குளியலின் தொடர்ச்சி, ஈன்ற குட்டிகளைத் தாயிடமிருந்து சரியான நாட்களில் பிரித்து,  அதைப் பதிவேடுகளில் குறித்தல், பழைய பயனற்ற ஆடுகளை மந்தையிலிருந்து நீக்குதல், நீல்வோம்,  சல்பேட் போன்ற குடற்புழு மருந்துகளை அளித்தல், ஜோனீஸ் நோய், கோமாரி நோய் போன்ற  நோய்களுக்குத் தடுப்பூசி போடுதல். 
          மே 
             
            தாயிடமிருந்து பிரித்த குட்டிகளுக்குத்  தாய்ப்பாலுக்குப் பதில் வைக்கோல், தட்டு மற்றும் அடர்தீவனம் அளித்தல், குட்டிகளை ஒட்டுண்ணி  நீக்கத்திற்காக வாய் மூலம் திரவ மருந்தளித்தல், காலை, மாலையில் மேய்ச்சலுக்கு ஓட்டிச்  செல்லல் மதிய வேளையில் மந்தையை கொட்டகை அல்லது மர நிழலில் ஓய்வெடுக்க வைத்தல், மரத்தின்  இழை தழைகளை வெட்டி ஆடுகளுக்கு அளித்தல், ஜோனீஸ் நோய், கோமாரி நோய்களுக்குத் தடுப்பு  மருந்தளித்தல் சரியான கொட்டகை வசதி மற்றும் குடிநீர் அளித்தல். 
          ஜீன் 
             
            சினை ஆடுகள் பராமரிப்பு, மர இழைத்  தீவனமளிப்பு, நல்ல கொட்டகை மற்றும் தேவையான அளவு குடிநீர் அளிப்பு, குட்டி போடுத்  கொட்டிலைத் தயார் செய்தல், கிருமி நாசினிக் கொண்ட கொட்டகை முழுவதும் சுத்தம் செய்தல்,  துள்ளுநோய், தொண்டை அடைப்பான் நோய், டெட்டானஸ் போன்ற நோய்களுக்குத் தடுப்பூசி  அளித்தல். 
          ஜீலை 
             
            செம்மறியாடுகளைக் கழுவி விடுதல்,  ரோமம் கத்தரித்தல் உரோமம் போடுதல், இரைப்பை குடல் நோய்களுக்கு மருந்து அளித்தல்,  தொண்டை அடைப்பான் நோய்த் தடுப்பூசி போடுதல், சினை ஆடுகளைக் கவனித்தல் இலையுதிர்க்கால  குட்டி ஈனும் தருணம், குட்டி ஈனுதலில் பராமரிப்பு, மேய்ச்சல் நேரம், காலை 8.00 மணி  முதல் மாலை 5.00 மணி வரை அடையாளக் குறியிடுதல், வாலை நீக்குதல், இலையுதிர்க்கால இனச்சேர்க்கைக்கு  பெட்டை ஆடுகளைத் தயார் செய்தல், இரைப்பைக் குடல் நோய்களுக்கு மருந்து அளித்தல் போன்றவை. 
          ஆகஸ்டு 
             
            குட்டி ஈனுதல், சினை ஆடுகள் பராமரிப்பு,  புதிதாகப் பிறந்த குட்டிகளைக் கவனித்தல், சினைக்குத் தயாரான ஆடுகளை இனச்சேர்க்கை செய்தல்,  பொலி கிடாக்களைத் தயார் செய்தல் மற்றும், தேவையான மருந்துகள் அளித்தல். 
          செப்டம்பர் 
             
            இனச்சேர்க்கைக்குத் தேவையான பொலிகிடாக்களைத்  தயார் செய்தல், இனச்சேர்க்கை செய்தல், தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குட்டிகளுக்கு உபதீனியளித்தல்,  குட்டிகளின் வளர்ச்சியை கவனித்துப் பதிவு செய்தல் மற்றும் மருந்துகள் அளித்தல். 
          அக்டோபர் 
             
            இலையுதிர்கால இனக்கலப்புத் தொடரும்,  பிரித்த குட்டிகளுக்குத் தீவனமளித்தல், குட்டிகளின் எடையை அளவிடல், மிகக்குறைந்த வளர்ச்சியுள்ள  குட்டிகளை மந்தையிலிருந்து பிரித்தல், துள்ளுநோய், ஜோனீஸ் நோய்களுக்குத் தடுப்பூசியும்  மருந்துகளும் அளித்தல். 
          நவம்பர் 
             
            பனிக்கால மேய்ச்சல், குடற்புழுத்  தாக்குதலை அறிந்து மருந்தளித்தல், ஜோனீஸ் நோய்க்குத் தடுப்பூசி அளித்தல், வேலி அடைத்தல்  போன்றவை. 
          டிசம்பர் 
             
            குளிரிலிருந்து பாதுகாக்க ஏற்றவாறு  கொட்டகை அமைத்தல், குறித்து வைத்த பதிவேடுகளைச் சரிபார்த்தல் குட்டி ஈனத் தயாராக உள்ள  ஆடுகளுக்கு முறையாகத் தீவனமளித்துப் பராமரித்தல், மந்தையில் பெருகி உள்ள குட்டிகளின்  எண்ணிக்கைக்கேற்ப கொட்டகையை விரிவுபடுத்தல் அல்லது அதிகப்படி ஆடுகளை விற்று விடுதல். 
            (ஆதாரம்: Handbook of Animal  Husbandary, Dr. Achariya) 
         |